Saturday, August 27, 2011

ஒரு தமிழன் முதலமைச்சராய் இருந்திருந்தால்

இதோ இன்னும் பதிமூன்றுநாட்கள் தான் நம் தமிழர் மூவரின் உயிர் ஊசலாடுகிறது. ஆறுகோடி மக்கள் இருந்து என்ன பயன்? வெறும் கண்டனங்கள், அறிக்கைகள், போராட்டங்கள் மட்டும் போதுமா? எவர் மதிக்கிறார் இப்பொழுது?

அய்யா இருந்தபோது அய்யா செய்வாரா? அய்யா செய்வாரா? என்று கையேந்தினோம். தந்தியடித்தார், அறிக்கை விட்டார், கவிதை பாடினார், மகளுக்கு மந்திரி பதவி இல்லை என்று மத்தியில் மிரட்டினார், உண்ணாவிரதம் என்கிறபெயரில் கடற்கரையில் படுத்து இரண்டு மணிநேரம் காற்றுவாங்கிவிட்டு வந்தார், கவிதைபாடினார், கண்ணீர் வடித்தாரே ஒழிய வேறொன்றும் இல்லை பலன். இழப்பு ஈழத்தின் முனேற்றம், புலிகளின் அழிவு, இரண்டுலச்ச மக்கள் படுகொலை.

இப்போது அம்மாவை உட்காரவைத்துவிட்டு அம்மா செய்வாரா? அம்மா செய்வாரா? என்று கையேந்தி நிற்கிறோம்.

வந்தார் மத்தியரசு இவரை மதிக்கும் என்று நினைத்தது பொய்யாய் போக, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றவர், பிரபாகரனை கைதுசெய்து இந்தியா கொண்டுவர வேண்டுமென்று தீர்மானம் போட்டவர், திடீரென்று ஈழ மக்கள் என்றார், எம்.ஜி.ஆர் போல் புதிய அவதாரம் எடுத்தார் தீர்மானம் போட்டார், அதற்கு பலனாக சமச்சீர் கல்வியை அழித்துவிட துடித்தார்.

இப்பொழுது இன்று மூன்று தமிழர்களை அதுவும் தமிழ்நாட்டில் தூக்கிலிடப் போகிறார்கள். தமிழகத்தின் முதல்வர், தமிழக மக்களை யாரிடமும் கையேந்த விடமாட்டோம் என்று சொன்னவர் இப்பொழுது மவுனம் காக்கிறார். கருத்துரைக்கவோ, அறிக்கை விடவோ, தீர்மானம் போடவோ முன்வரவில்லை.

இத்தனை மக்களும் கேட்டுக்கொண்ட பிறகும் முதல்வர் அமைதிகாக்கிறார் என்றால் என்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவதை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்றே அர்த்தம்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன?

ஈழப் பிரச்சனையாகட்டும், மீனவர் பிரச்சனையாகட்டும், இந்த தூக்குதண்டனை பிரச்சனையாகட்டும் தமிழ்நாடு என்பதால் தான் இப்படி. இதே வேறு மாநிலமாக இருந்தால் நடப்பதே வேறு என்றும் சொல்லிக்கொள்கிறோம் வெக்கமில்லாமல்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தலைவர்கள் அவர்கள் இனத்தவரே. அனால் நம் மாநிலத்தில்தான் போவோர் வருவோரெல்லாம் தலைவர். கண்டவரெல்லாம் முதல்வர் ஏதோ அதிசயமாக எம்.ஜி.ஆர் ம், வை.கோ ம் இருந்துவிட்டால் கண்டவரையெல்லாம் தலைவராகவும் முதல்வராகவும் கொள்வது நம் இனத்திற்கு நாமே துரோகம் செய்வது போலாகுமே?

இதோ இப்பொழுது கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை ஏன்? நாம்தான் நம் மக்களுக்கும் துரோகம் செய்கிறோம். யார் எந்த பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை அங்கு வைத்த நம்மைத்தான் சொல்லவேண்டும்.

ஒரு இனத்திற்கு தலைவன் அந்த இனத்தை சேர்ந்தவன் இல்லை என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். பிறகு அவரிடம் எதிர்பார்ப்பது அதைவிட பெரிய முட்டாள் தனம்.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் ஈழம், வாழ்க தமிழ் நாடு, வாழ்க தமிழ்மக்கள், வாழ்க திரவிட இனம், வாழ்க தமிழினம்



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய