Wednesday, August 17, 2011

தன்னிலை அறியாத் தமிழன்....

இரண்டாயிரம் ஆண்களுக்கு மேலாக இருந்துவரும் ஒரு பழமையான இனம். பனிஷியர் என்று சொல்லப்படும் பனையேறிகள் இனம் அதுவும் இப்பொழுது இத்தாலி துனிஷியா ஆகிய இனத்தின் முன்னோடிகள் திராவிட இனத்தை சார்ந்தவர்களே என்று கணிக்கப்படும் அளவிற்கு பழமையான இனம்.

பூமியில் நாகரிக வளர்ச்சி என்பது தொடங்குவதற்கு முன்னால் நாகரீகத்தின் உச்சியை எட்டிப்பிடித்து கட்டுப்பாடு, கண்ணியம், பண்பாடு, ஆட்சிமுறை, ராஜ தந்திரம், குடவோலை முறைத்தேர்தல், கட்டிடக்கலை, இசை, நாடகம், மொழிபயிர்ச்சி, தற்காப்பு, போர்க்கலை, வாணிபம், ஆராய்ச்சி, கல்வெட்டு, கடல்கடந்து பயணம், வெளிநாடுகளின் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி என்று அனைத்திலும் கொடிகட்டி பரந்த இனம்.

நட்போடு வந்தவரை தெய்வமாகவும், பகையோடு வந்தவரை துச்சமாகவும் மதித்து வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற இனம். இன்று இருக்கும் அவலம் என்ன? தமிழன் உண்மையில் தான் யாரென்று உணர்ந்திருக்கிறானா? இல்லை உணர மறுக்கிறான?

வந்தாரை வழவைத்தோம், ஆளவிட்டதில்லை, அனால் இன்று வந்தவர்கள் மட்டும் வாழ்கிறார்கள், கண்டவரெல்லாம் ஆள்கிறார்கள். ஏன் என்று கேக்கவும் நாதியில்லை, தட்டிக் கேக்கவும் தகுதியில்லை.

கலை வளர்த்தவன் கலைக்கே அடிமையா? ஒரு வகையில் ஆம் என்றால் வெக்கக்கேடு. அண்ணாவிற்கு பிறகு தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லை. சரி அவன் திராவிடன் என்று கணக்கில் கொண்டாலும், வேறு எந்த மாநிலத்திலும் தமிழனை ஆள விட்டதாக தெரியவில்லை. இங்கு மட்டும் ஏன் இப்படி?

எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அசிங்கம் நிகழ்வதில்லை. உண்மையில் தமிழனுக்கு ஆளத்தகுதி இல்லையா? இல்லை தமிழனுக்கு தமிழன் ஆள்வது பொருக்க வில்லையா? எதுதான் தடுக்கிறது உன்னை.

குழந்தையின் வலி பெற்றவனுக்குத்தான் தெரியும், பக்கத்துவீட்டுக்காரனுக்கும் திண்ணையில் படுத்து தூங்கிப்போக வந்தவனுக்கும் எப்படி தெரியும்?. ஏதோ அபூர்வமாக ஒரு மனிதன் இருந்துவிட்டான் என்பதற்காக அனைவரும் அப்படி இருந்துவிடுவார்கள் என்று நினைப்பது முட்டாள் தனம் இல்லையா?

எவனையாவது உட்கார வைத்து விடுவது? பிறகு அவன் அது செய்ய வில்லை இது செய்யவில்லை என்றால் யார்மீது தவறு? அக்கறையில்லாதவனை தேர்ந்தெடுத்தவர் மீதா? இல்லை அக்கறை இல்லாதவன் மீதா?

செய்வதெல்லாம் செய்துவிட்டு பின்பு குத்துகிறதே, குடைகிறதே என்றால் யார் என்ன செய்ய முடியும்?. ஒற்றுமை என்பதை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோமா? அதனால்தான் இன்று பிறரிடம் கையேந்தி நிற்கிறோமா? அசிங்கங்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டோமா? தன்மானத்தை இழந்து பணத்திற்கும் பகட்டு வாழ்க்கைக்கும் அடிபணிந்துவிட்டோமா?

தமிழனை கொல்லக்கூடதென்று போராடுகிறது ஒருகூட்டம்? மதிக்கவில்லை எவரும். தமிழனை தூக்கிலிடாதே என்று புறப்படுகிறது ஒரு கூட்டம், அதே இனத்தில் அவர்களை தடுத்து கைதுசெய்ய சொல்கிறது தன்மானமிழந்த ஒரு திருட்டு கூட்டம்.

எதற்காக நீ தடுக்கிறாய், உண்மையில் தேசப்பற்றா? இல்லை பணப்பற்று, காசுக்காக அந்த கட்சியை அண்டிப்பிழைக்கும் நீ இந்த நன்றி விசுவாசத்திலாவது தமிழன் என்று நிருபிக்கிறாயே அதுவரை மகிழ்ச்சி எமக்கு.

ஒன்று மட்டும் நினைவில்கொள் தமிழா, வந்தவனெல்லாம் ஆட்சி செய்தால் உன் இனம் அழிக்கப்படும் அதில் நீ மட்டும் எப்படி தப்புவாய்? பிறர் வாழக்கூடாது நான்மட்டும் வாழவேண்டும் என்று எண்ணாதே உன்னைவிட பலம்வாய்ந்தவன் அப்படி நினைத்தால் நீ காணாமல் போய்விடுவாய். நாம் வாழ்வோம் என்று நினை, அழிக்க வருவோரெல்லாம் காணமல் போவார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. வாழ்வோ சாவோ நமக்கு நாமே என்று தீர்மானம் செய்.

உன்னினத்தை தலைநிமிரச்செய் வாழ்க்கை வளமாகும். நாடு செழிப்பாகும் நம்பிக்கை உழைப்பைத்தரும், உழைப்பு செல்வம் தரும். யாரையும் அண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. தன்மானத்தோடு தரணியில் நடக்கலாம்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய