Tuesday, August 16, 2011

மறைக்கப்படும் செம்மொழி.....

அப்படி.......... இப்படி......... என்று ஒருவழியாக சமச்சீர் கல்வி நடைமுறைப்படத் தொடங்கிவிட்டது. எம்மின மக்களுக்கு ஒரு நல்ல கல்விமுறையை வழங்குவதில்த்தான் எத்துனைப் போராட்டம்?. எத்தனை வழக்குகள்?, எத்தனை அறிக்கைகள்?. நினைத்துப் பார்க்கவே கேவலமாக இருந்தாலும். ஒருவழியாய் செயல்படுத்த தொடங்கியிருப்பது ஆறுதல்.

இருப்பினும் புயல்விட்டது மழைவிட்டபாடில்லை என்பதுபோல், கடந்த ஆட்சியில் இருந்தவரால் இயற்றப் பட்ட பாடல்கள் கிழிக்கப் பட்டாலும். தேவையில்லாமல் நிறைய பக்கங்களும் குறிப்புகளும் நீக்கப் பட்டுள்ளன.

அதற்கு அவர்கள் கூறும் காரணம் கடந்த ஆட்சியின் கொள்கைகளும், அவர்களின் கொடியின் வர்ணமும் இடம்பெற்று இருப்பதே என்று சொல்லப் படுகிறது. இந்த மானங்கெட்ட தனத்தை என்னவென்று சொல்வது?

இதுகூட பரவாயில்ல, ஒரு தனிமனிதனைப் பற்றியோ அல்லது மறைமுகமாக அவரது புகழையோ ஏற்றிறுக்கிறது என்று சமாதனப் படுத்திக் கொண்டாலும். கடந்த ஆட்சியில் நடத்தப் பட்டது என்கிற ஒரே காரணத்தினால் செம்மொழி மாநாட்டு அடையாளச்சின்னம் மறைக்கப் படுவது எவ்விதத்தில் ஞாயம்? அந்த அளவுக்கு மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்களா ஆட்சியில் இருக்கிறார்கள்? இவர்களை நாம் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்து உட்கார வைத்து அவதிப்பட தமிழனின் தலையெழுத்தென்ன அவ்வளவு மட்டமாகிவிட்டதா?

எத்தனை முறை பட்டாலும் திருந்துவதில்லை நாம் ஏன்?

எவ்வளவுதான் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும், இவர்கள் அரசியலில் விளையாட இதையும் விட்டு வைக்ககவில்லையே என்று நினைக்குபோது எரிமலையாகிறது நெஞ்சம்.

யார்தான் நடத்தியிருந்தால் என்ன? செம்மொழி மாநாடு என்பது நம் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமையல்லவா? அதை இப்படி ஒட்டி மறைத்து அசிங்கப் படுத்துவதை எப்படி சகித்துக்கொள்வது. எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை தெரியப்படுத்தக் கூடாது என்ற ஒரு மறைமுக கூட்டத்தின் நோக்கம் இவ்வாறெல்லாம் எதிரொலிக்கச் செய்கிறது.

தமிழனின் பெருமையை மறைக்கவும், தமிழன் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாதென்றும் அந்தக் கூட்டம் செய்யும், மறைமுக செயலுக்கு அளவில்லாமல் போகிறது.

எப்படிப் பட்டதாகினும், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல். தமிழையோ தமிழனையோ அவனின் பெருமையையோ ஒன்டிப்பிழைக்க் வந்தக் கூட்டம் ஒருபோதும் அழித்துவிட முடியாதென்பது நிதர்சனமான உண்மையே

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய