Monday, August 15, 2011

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்...

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்.

நாம் அடிமையாய் இருந்தோம்..... இருந்தோம்..... என்று சொல்லியே மனதளவில் இன்னும் அடிமைகளாகவே வாழ்கிறோம்.

அதன் விளைவுகள்தான், வெள்ளைக்காரனைக் கண்டால் இன்னமும் மண்டியிடுவது, மதிப்பளிப்பது. நம்மை நாமே தரக்குறைவாக நினைப்பது, நமது வழக்கங்களை மதிக்காமல் அவர்களது வழக்கங்களை பெரிதாக நினைப்பது.
அவர்களது பொருட்களை பெருமையாக எண்ணுவது போன்ற எண்ணங்களுக்கு காரணமே அந்த அடிமை புத்திதான்.

நான் சுதந்திரத்திற்கு முன்னும் வாழவில்லை, சுதந்திரம் வாங்கியபோதும் நான் இருக்கவில்லை ஆனால் எனக்கு எப்படி இந்த பாதிப்புகள் வந்தன.

அவர்கள் உலகத்தில் மற்ற நாடுகளை பிடித்தது திறமையினால் அறிவியலின் வளர்ச்சியினால் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவைகள் நம் நாட்டை பிடிக்க முடிந்ததன் காரணம் நம்மிடம் இருந்த நல்ல குணமும், ஒற்றுமையின்மையும், அவர்களிடம் இருந்த திருட்டு புத்தியும் தான் என்று அடித்து சொல்லுவேன்.

இதைத்தான் இன்று நாம் திறமை என்றும், வியாபார தந்திரம் என்றும் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் செய்கிறோம்.

என் நாடு, என் இனம், என் மதம், என் சாதி, என் குடும்பம் என்பதெல்லாம் போய் நான் என்பது மட்டும் மிஞ்சி நிற்கும்.

தன்மானமில்லாமல், தனிமனித உரிமை இல்லாமல் என்ன சுதந்திரம் இங்கு வாழ்கிறது. நம் மக்களை நாமே கொல்வதா சுதந்திரம்?. இல்லை நம் மக்களிடம் நாமே கொள்ளையடிப்பதா சுதந்திரம்?.

ஊழலுக்கு எதிராக ஒரு வலிமையான சட்டம் நிறைவேற்ற முடியவில்லை பிறகு என்ன சுதந்திர தினம் வேண்டி கிடக்கு நமக்கு?. அதைக் கொண்டாட என்ன அருகதை இருக்கு நமக்கு?.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை ஒரு மாநிலம், ஒரு மாநிலத்தின் மக்களின் கோரிக்கையை மதிக்க வில்லை மத்திய அரசு. ஒரு மாநிலத்தின் தனது மக்களை இன்றும் கொன்று குவிக்கிறது இதே மத்திய அரசு, என்ன சுதந்திரம்? என்ன ஜனநாயகம் இது? இதில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.

பெரியார் சொன்னதுபோல் இதை ஓர் கறுப்புதினமாக அறிவிக்க வேண்டும். என்று ஊழலில்லாத, ஒற்றுமையான மக்களால் நல்லாட்சி நடத்தப் படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர தினம்.

அடிமை படுத்திய ஆங்கிலேயன் கூட காந்தியை பத்திரமாக வைத்திருந்தான். விடுதலை வாங்கி நாம் எத்தனை ஆண்டுகள் நம்மால் அவரை பாதுகாக்க முடிந்தது?.

சமச்சீர் கல்வியை கலைக்க ஒரு மறைமுக கும்பலின் சதி நடக்கிறது தடுக்க முடியவில்லை, தென்னிந்தியாவின் உண்மையான வரலாறு பெரும்பாலும் அழிக்கப்படுகிறது அதை நிறத்த முடியவில்லை, மறைமுக திணிப்பு செயல்படுத்தப் படுகிறது, ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்குக்கப் படுகிறது இவற்றை எல்லாம் ஒழிக்க முடியவில்லை பிறகு எதற்கு இந்த சுதந்திர தினம்?. தன நட்டு மக்களை தரக்குறைவாக பேசும் ஒரு வெளிநாட்டவனை கண்டிக்க இயலாத வக்கத்த அரசுக்கு ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டம்.

இந்தியாவில் வேண்டாம் தமிழகத்தின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் இந்த சுதந்திர நாட்டில்?. அசோகர் மரத்தை நட்டார், ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டினார், இந்திய சுதந்திரப் போராட்டம் இதைத்தவிர வேறு என்ன தெரியும் நமக்கு?

நியாயமாய் நடப்பவர்க்கு வாழ வழியில்லை, அநியாயத்தை எதிர்ப்போருக்கு உயிருக்கு உத்திரவாதமில்லை.

வாழ்க பாரத தேசம்

Wednesday, August 10, 2011

என்று மாறுவோம் நாம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அசை என்பது உண்டு, ஆனால் அது பேராசையாக இருத்தல் கூடாது. அதன் விளைவு பொறமை, பொறமை இருந்தால் ஒழுக்கம் கெடும். தனிமனித ஒழுக்கம் மறைந்தால் சமூகம் சீர்குழையும், நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியாகும்.

நான் நல்லா இருக்கணும்னு நினைப்பது தவறில்லை, நான் மட்டும்தான் நல்ல இருக்கணும் என்று நினைப்பதுதான் தவறு. அதுதான் இன்று பெரும்பாலனோர் மனது.

ஒற்றுமை இல்லை, உணர்வு இல்லை, பற்று இல்லை இப்படி அனைத்து இல்லைகளுக்கும் கரணம் இதுவே. இப்படிப் பட்ட எண்ணங்களின் விளைவாக இவை அனைத்தும். பாமர மக்களாக இருந்தாலும் பரவாயில்லை, படித்தவர்கள் தான் அதிகம் இதுபோல் இருக்கிறோம் ஏன்?

இதுபோல் யார் எவ்வளவு சொன்னாலும் நாம் மாறுவதில்லை, இருந்தாலும் ஒரு இந்தியனாக, தமிழனாக எதிர்கால இந்தியாவை முன்னெடுத்து செல்லும் நோக்கத்தோடு இதைப் பதிக்கிறேன்.

உயர்ந்த எண்ணமும், ஆழ்ந்த அறிவும், தேசபக்தியும் கொண்ட அருமைத்தலைவர் நம் முன்னால் தலைமைக் குடிமகனாய் இருந்து அதுப்போல் வாழ்ந்தும் காட்டும் இனிய தலைவர் திரு.அப்துல் கலாமின் கடிதம் என்று ஒரு மின்னஞ்சல். இது உண்மையா இல்லையா என்று ஆராய முற்ப்பட்டாலும் அவரைத் தவிர வேறு யாரும் இப்பொழுது நாட்டில் இப்படி கூறுவது கிடையாது, மேலும் இது நமக்கு நிச்சயம் பயனுள்ளது என்னும் காரணத்தினாலும், ஏற்க்கனவே பலர் இதைப் பதித்திருந்தாலும் என் கடமையாக பலருக்கு கொண்டு சேர்க்கவும், இதன் மூலம் ஒருவராவது இதை உணர்வார் என்ற நப்பாசையினாலும் பதிக்கிறேன். நன்றி

ஏன் நமது ஆற்றலை அறிந்துகொள்ள மறுக்கிறோம்?

நம்நாடு சிறந்த நாடு. பல வெற்றிச் சரித்திரங்கள் நமக்குச் சொந்தம். இருந்தும் அவற்றை அடையாளம் காண மறுப்பது ஏன்?

Remote Sensing Satellite தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறோம்.

பால் உற்பத்தியில் முதலிடம்.

அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாம் இடம்.

ஒருமுறை இஸ்ரேல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சினால் விளைந்த சேதங்களும், உயிரிழப்புகளும் கண்ணில்பட்டது. ஆனால். முதல்பக்கத்தில், ஐந்து வருடங்களுக்குள் தங்கள் நாட்டை வளப்படுத்திய மனிதரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. உத்வேகம் தரும் இந்தச் செய்தியால் மற்ற சேதங்கள், உயிர்ப்பலிகள் காணாமல் போயின. நமது நாட்டில் நாம் ஏன் எப்போதும் மரணம், நோய், தீவிரவாதம், குற்றம் இவைகளையே வாசித்துக் கொண்டிருக்கிறோம்?

மற்றொரு கேள்வி: நாம் ஏன் வெளிநாட்டுப் பொருட்களின்மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம்? வெளிநாட்டுத் தொலைக்காட்சி, தொழில்நுட்பம், ஆடைகள் இவற்றை அதிகம் விரும்புகிறோம். தன்னம்பிக்கையே சுயமரியாதைக்கான காரணம் என்பதை நாம் உணரவில்லையா?

ஹைதராபாத்தில் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி என்னிடம் கையெழுத்து கேட்டாள். நான் அவளிடம் உனது இலட்சியம் என்ன என்றேன். அவள், வளர்ந்த இந்தியாவில் வாழ ஆசைப்படுகிறேன்” என்றாள். அவளுக்காக நீங்களும், நாமும் இந்தியாவை வளப்படுத்த வேண்டும். நமது நாடு வளர்ச்சியில் குறைந்ததல்ல; மிகுந்தது என்று நாம் அறிவிக்க வேண்டும்.

பொதுவாக நீங்கள் சொல்வது :

அரசாங்கம் செயலற்றது.

சட்டங்கள் பழமையானது.

மாநகராட்சி குப்பைகளை ஒழுங்காக அள்ளுவதில்லை.

தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லை.

ரயில்வே நகைப்புக்குரியது.

நமது விமானசேவை உலகிலேயே மட்டமானது.

கடிதங்கள் உரிய இடத்தை அடைவதில்லை.

நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள் மேலும் சொல்கிறீர்கள். இவற்றை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன?

சிங்கப்பூர்வாசியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் உங்கள் சிகரெட்துண்டை சாலையில் எறிவதில்லை. அல்லது தெருக்களில் உணவருந்துவதில்லை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை Orchard Road செல்வதற்கு 5 டாலர் (தோராயமாக 60 ரூபாய்) தருகிறீர்கள். உணவகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் இருந்தால் பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் எதுவும் சொல்வதில்லை!

உங்களால் முடியுமா? நீங்கள் ரம்ஜான் தினத்தில், துபாயில் தெருக்களில் உணவருந்தத் துணிவதில்லை.

லண்டனில் தொலைபேசித்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு மாதம் 10 Pound லஞ்சம் தந்து எனது STD / ISD பில்லை வேறொருவருக்கு அனுப்பிவிடு என்று சொல்வதில்லை.

வாஷிங்டனில் 55 KM வேகத்துக்குமேல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் “நான் யாரென்று தெரியுமா? இன்னாரின் மகன். உனது லஞ்சத்தை வாங்கிக் கொண்டு வழிவிடு” என்று பேசுவதில்லை.

ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து கடற்கரைகளில் தேங்காயை அதற்குரிய தொட்டியில் போடாமல் கடற்கரையில் எறிவதில்லை.

ஏன் நீங்கள் டோக்கியோ தெருக்களில் புகையிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் நீங்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்க முயல்வதில்லை?

நாம் அதே ”நீங்களைப்” பற்றித்தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் நீங்கள் சொந்த நாட்டில் செய்வதில்லை.இந்தியாவில் இறங்கியதும் குப்பைகளைத் தெருக்களில் வீசுகிறீர்கள். வெளிநாட்டில் விதிகளை முறையாகப் பின்பற்றி நன்மதிப்புமிக்க குடிமகனாகத் திகழும் நீங்கள் ஏன் நமது இந்தியாவில் அவ்வாறு இருப்பதில்லை?

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு பொறுப்புகளை மறந்துவிடுகிறோம். அரசே அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தெருவில் இருக்கும் குப்பையைத் தொட்டியில் போடாமல் அரசே சுத்தம் செய்யக் காத்திருக்கிறோம். கழிவறையை முறையாகப் பயன்படுத்தாமல் ரயில்வே சிறந்த கழிவறை வசதி தரவேண்டும் என்கிறோம்.

பெண்கள் சார்ந்த சமூகப் பிரச்சனைகளில் வரதட்சணையைப் பற்றி நமது வீடுகளில் உரக்கப் பேசிவிட்டு எதிர்மறையாக நடந்து கொள்கிறோம். இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?

அமைப்பு என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரை பிறர், அடுத்த வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் என்பது நமது வசதியான கருத்து. ஆனால் நிச்சயமாக நீங்களோ, நானோ அல்ல. சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்று வரும்போது நாம் நமது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, எங்கோ தூரதேசத்திலிருந்து தூதுவன் வந்து யாவற்றையும் சரிசெய்வான் என்று நம்புகிறோம். அல்லது நாட்டைவிட்டு ஓடுகிறோம்.

அமெரிக்காவுக்கு ஓடி அவர்கள் அமைப்பைப் புகழ்கிறோம். நியூயார்க் பாதுகாப்பில்லாத போது இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில்லாத போது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கிறோம். அங்கு போர் துவங்கினால், நம்மைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.

ஒவ்வொருவரும் நாட்டைப் பழிக்கிறோம். இங்குள்ள அமைப்பை மேம்படுத்த யோசிப்பதில்லை. நமது மனசாட்சி பணத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அன்புள்ள இந்தியர்களே, இந்தக் கட்டுரை நமது மனசாட்சியைச் சோதிப்பதற்கான வாய்ப்பு.

ஜான் கென்னடியின் வார்த்தைகளை இந்தியாவிற்குப் பொருத்துகிறேன்.

'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை நாம் செய்வோம்!

நன்றி,
Dr.அப்துல் கலாம்.

Tuesday, August 9, 2011

பொய் சிரிப்பு....

தோரணங்களுக்கு கீழே
ஊர்கூடி ஒன்றாய் அமர்ந்திருக்க
மண்டபம் கோலாகலமாய் நிறைந்திருக்க

இசைக்கச்சேரி ஒருபுறம்
ஓங்கி ஒலிக்கும் குழந்தை ஒருபுறம்
சிதறி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்
எங்கும் சலசப்பாய் சிதறிவிழும் பேச்சுக்கள்

மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து வீச

அழைத்தவுடன்
அடித்துக்கொண்டோடும்
கூட்டத்தின் நடுவே
தெரிந்த முகங்கள் சில
தெரியாதவை பல
என்றாலும்
அனைத்திற்கும் பதிலாய்
முகத்தோடு ஒட்டப்பட்ட பொய் சிரிப்பு

நதியின் வழியே....

நீண்ட நெடுந்தொலைவாய் காண்கிறேன்
இந்த நதிக்கரையை

வளைவுகள் அதிகம் என்றாலும்
பஞ்சமில்லை அழகு
நீரில் தெளிவில்லை என்றாலும்
குறைவில்லை வேகம்

பயணித்துக்கொண்டிருக்கிறேன்
கரைமீதென்றாலும்
நினைவுகள் அனைத்தும் நீரின் மேலும்
அதன்மீது எழும் அலைகளின் மேலும்

நதியின் பிறப்பிடம் அறிவேன்
என் பயணத்தின் தொடக்கமும்
அதுவாகத்தான்

முடிவிடம் மட்டும் அறியேன்
என் பயணத்திற்கும்
இந்த நதிக்கரைக்கும்

Friday, August 5, 2011

என்னைப் பொருத்தே....


இதோ இருக்கிறேன் நான் என்று சொல்லப்படுகிறது
அனைத்திற்கும் தொடக்கமும்
முடிவுமாய் நானே

என்னுள் அனைத்தும்
என்னால் அனைத்தும்
என்று இறுதியாய் நம்பப்பட்டாலும்
என்னைக் கணக்கிட்டதாய் தெரியவில்லை

எனக்கென்று ஆதியுமில்லை
அந்தமுமில்லை
எதுவாய் இருக்கிறேன் என்பதும் புலப்படுவதுமில்லை

தொடக்கமென்பது உண்டா?
என்பது உறுதியில்லை
நடப்பவை அனைத்திற்கும்
அடையாளப்படுத்தப் படுகிறேன்
என்பது மட்டுமே உறுதி

நான் கடப்பதாய் சொன்னாலும்
என்னால் அனைத்தும் கடப்பதென்பது
பொருத்தமானது

அனைத்திற்கும் நானே கணக்கீட்டாலன்
அனைத்திற்கும் நானே காரண கார்த்தா

நிலையானதென்பது என்னிடம் இல்லை
நிலையில்லா நிலையில்
முடிவிலியாய்
நான் மட்டும் நிலைத்திருக்க

நிகழ்வு என்பதே நான் என்று இருக்க
ஒவ்வொரு நிகழ்வும் என்னைப் பொருத்தே
ஒவ்வொரு அமைப்பும் எனது நிகழ்வே